நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறந்த ஃபினிசராகவும் போற்றப்படுகிறார். குறிப்பாக சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலக கோப்பையை வென்று காட்டிய அவர் 2013 சாம்பியன் டிராபியில் தாம் உருவாக்கிய விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன் பட்டம் வென்று காட்டினார். அதன் காரணத்தாலே வருங்காலத்தையும் கருத்தில் கொண்ட அவர் நட்சத்திர சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து இன்றைய இந்திய அணியின் வருங்காலத்தை அப்போதே சிறப்பாக கட்டமைத்தார் என்றே சொல்லலாம்.இருப்பினும் அதன் காரணமாக சில தரமான ஜாம்பவான் வீரர்களுக்கு கேரியரின் கடைசி காலங்களில் கௌரவத்துடன் ஓய்வு பெறுவதற்கு தேவையான ஆதரவு கொடுக்காத அவர் மொத்தமாக கழற்றி விட்டதைப் பற்றி பார்ப்போம்:
1. கெளதம் கம்பீர்:
2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை ஆகிய தொடர்களை தோனி வெல்வதற்கு இவர் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து முக்கிய காரணமாக இருந்தார். இருப்பினும் 2012க்குப்பின் அவரை மொத்தமாக கழற்றி விட்ட தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இளம் இடதுகை வீரராக இருந்த ஷிகர் தவானை புதிய ஓப்பனராக அறிமுகப்படுத்தினார்.
அதில் தவான் அசத்திய காரணத்தால் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை வென்ற போதிலும் கம்பீரின் பக்கம் தோனி தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் திரும்பவில்லை. அதன் காரணத்தாலேயே இப்போதும் தோனி மீது கம்பீர் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
2. வீரேந்திர சேவாக்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்கள் அடித்து 2011 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இவரையும் 2012க்குப்பின் தோனி கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டார். குறிப்பாக சுமாரான ஃபிட்னஸ் காரணமாக மெதுவாக ஃபீல்டிங் செய்த அவருக்கு பதிலாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக தோனி அறிமுகப்படுத்தினார்.
அதை இறுக்கமாக பிடித்த ரோகித் சர்மா இரட்டை சதங்களை அடித்து அசத்தியதால் சேவாக்கிற்கு மேற்கொண்டு தோனி வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் அடுத்தடுத்த வருடங்களில் சுமாராக செயல்பட்ட சேவாக் கடைசியாக 2015இல் இந்தியாவுக்காக விளையாடி ஓய்வு பெற்றார்.
3. ஹர்பஜன் சிங்:
2007, 2011 உலக கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றி 2000 – 2012 வரை முதன்மை ஸ்பின்னராக திகழ்ந்த இவரையும் வருங்காலத்தை கருத்தில் கொண்ட தோனி கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டினார். மறுபுறம் அந்த வாய்ப்பைப் பெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று ஜாம்பவானாக உருவாகும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2016 டி20 உலகக் கோப்பையில் அவரை மொத்தமாக பெஞ்சில் அமர வைத்த தோனி மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்கவில்லை.
அதன் காரணமாகவே சென்னை அணிக்காக விளையாடிய போதிலும் இப்போதும் தோனி பற்றி சமயம் கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள ஹர்பஜன் வன்மத்தையும் காட்டி வருகிறார்.
4. ஆஷிஷ் நெஹ்ரா:
2003 உலகக்கோப்பையில் முதன்மை பவுலராக விளையாடி 2011இல் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவிய இவரை அதன் பின் புவனேஸ்வர் குமார், பிரவின் குமார் போன்ற இளம் பவுலர்கள் வந்ததால் 5 வருடமாக தோனி இந்திய அணியில் சேர்க்கவில்லை. இருப்பினும் கடுமையாக போராடி 2016 டி20 உலக கோப்பையில் கம்பேக் கொடுத்த அவர் இனிமேலும் தொடர் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை கருத்தில் கொண்டு 2017இல் தம்முடைய சொந்த மைதானத்தில் நடந்த டி20 போட்டியுடன் ஓய்வு பெற்றார்.