தற்போதைய கிரிக்கெட் போட்டியில் மூன்று விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்டராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் திகழ்கிறார். சமீபகாலமாக அவர் நல்ல ஃபார்மில் இருப்பது தான் அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவரது பேட்டிங்கில் எவ்வித குறைகளையும் இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இவரது பேட்டிங் ஃபார்மை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி கூட பாபர் அசாமை புகழந்திருந்தார். மூன்று விதமான போட்டிகளிலும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவதாகவும், அவரது ஆட்டத்தை தான் ரசிப்பதாகவும் கோலி கூறியிருந்தார். கோலி பாபர் அசாமை புகழ்வது இது முதல்முறை அல்ல.
இந்த நிலையில் கோலி குறித்து பாபர் அசாம் கூறுகையில், கோலியிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன். அவரை போன்ற ஒரு பெரிய வீரர் நம்மை பற்றி ஏதாவது நன்றாக சொன்னால், அது மிகுந்த நம்பிக்கையைத் தரும். அது எனக்கு பெருமையான தருணம் என பாபர் ஆசம் கூறினார்.
முதன்முதலில் கோலியை சந்தித்து பாபர் அசாம் நினைவு கூறுகையில், 2019ல் நான் விராட் கோலியை சந்தித்தபோது, அவர் உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். இப்போதும் அவர் உச்சத்தில் தான் இருக்கிறார். பேட்டிங் அணுகுமுறை குறித்து நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன், அதற்கு அவர் எனக்கு மிகவும் விரிவாக விளக்கினார்.
அது எனக்கு நல்ல உதவியாக இருந்தது. அவரை சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரிடம் மிகுந்த மரியாதையை பார்க்கிறேன். தற்போது அவர் உலகின் சிறந்த பேட்டராக இருந்தாலும் அது மாறவில்லை. என்னை பற்றிய அவரது அணுகுமுறை மாறுவதை நான் பார்க்கவில்லை என பேசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான முதல் போட்டியில் 131 பந்துகளில் 151 ரன்களை விளாசினார் பாபர் அசாம். இது அவரது 19வது ஒருநாள் சதமாகும். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 19 சதங்களை பதிவு செய்த வீரர் என்ற கோலியின் சாதனையை முறியடித்தார். 104 இன்னிங்ஸில் இச்சாதனையை அவர் எட்டினார். இந்த நிலையில் கோலியிடம் இருந்து பேட்டிங்கில் அதிக விஷயம் கற்றுக்கொண்டதாக பாபர் அசாம் மனம் திறந்து கூறியது, பலரை ஆச்சர்யபடுத்தியுள்ளது.