இந்த வருடம் அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அதே சமயம் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் துவங்குகிறது. பல விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு பின் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் நடைபெறும் இந்த தொடர் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாள் ஆகிய ஆசிய கண்டத்தின் டாப் 6 கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன.
உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதில் தங்களுடைய லட்சிய முதல் ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் உறுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வங்கதேச அணியினருக்கு மத்தியில் தொடக்க வீரர் முஹம்மது நைம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நெருப்பு மீது நடைப்பயிற்சி:
அதாவது எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் பதறாமல் உறுதியுடன் விளையாடுவதற்கு தேவையான வலுவான மனநிலைமையை உருவாக்குவதற்காக அவர் தம்முடைய பயிற்சியாளரின் வழி காட்டுதலுடன் நெருப்பு மீது நடந்து வித்தியாசமான பயிற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வீடியோவில் 3 முதல் 5 அடி அளவுக்கு அனல் கொதிக்கும் நெருப்பை மூட்டி அதன் மீது பதறாத மன நிலைமையுடன் அவர் நடந்து வரும் போது அவருடைய பயிற்சியாளர் கைதட்டி பாராட்டினார்.
வரலாற்றில் எத்தனையோ ஜாம்பவான்கள் மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்கள். ஆனால் மனநிலை வலுப்படுத்துவதற்காக வங்கதேச வீரர் இப்படி ஒரு தனித்துவமான நெருப்பின் மீதும் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் வரலாற்றில் சச்சின் முதல் லாரா வரை எத்தனையோ ஜாம்பவான்கள் செய்யாத பயிற்சியை வங்கதேச வீரர் செய்ததை பார்த்து வழக்கம் போல எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
ஆனாலும் ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற சவாலான எதிரணி பவுலர்கள் வீசும் பந்துகளை அனல் பறக்க அடித்து நொறுக்குவதற்காகவே தங்களுடைய தொடக்க வீரர் இப்படி வித்தியாசமான பயிற்சியை தைரியமாக மேற்கொண்டு வருவதாக வங்கதேச ரசிகர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்துகின்றனர். அதன் காரணமாக இம்முறை நிச்சயம் தங்களுடைய அணி லட்சிய முதல் ஆசிய கோப்பையை வெல்லும் என்று வங்கதேச ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த ஆசிய கோப்பையில் வங்கதேசம் தன்னுடைய முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு பல குளறுபடிக்கு மத்தியில் தமீம் இக்பால் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் அவர் காயமடைந்து வெளியேறியதால் தற்போது நட்சத்திர ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசன் தலைமையில் இந்த தொடரில் களமிறங்கி வெற்றி காண்பதற்கு வங்கதேச அணியினர் இப்படி நெருப்பின் மீது பயிற்சிகளை எடுத்து தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.