சர்வதேச அளவில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வயது காரணமாக நாளடைவில் சுமாராக செயல்பட்ட காரணத்தால் கழற்றி விடப்படுவது சகஜமாகும். அதே போல ஐபிஎல் தொடரிலும் ஒரு கட்டத்திற்கு பின் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர்கள் ஓய்வு பெற்று வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடும் முடிவை எடுக்கின்றனர். அதாவது இந்திய வீரர்கள் சர்வதேச மற்றும் ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓய்வு பெற்றால் மட்டுமே வெளிநாடுகளில் விளையாட முடியும் என்ற விதிமுறையை பிசிசிஐ வைத்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடரில் எவ்வித வரம்புகளும் இல்லாமல் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் அறிந்து கொள்கிறார்கள். அந்த அனுபவத்தை ஐசிசி தொடர்களில் பயன்படுத்தும் அவர்கள் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றி காண்பது சமீப காலங்களில் சகஜமாகி வருகிறது. மறுபுறம் தனித்தன்மை போய்விடும் என்று பிசிசிஐ கடைபிடிக்கும் விதியால் ஐபிஎல் தவிர்த்து வேறு எங்கேயும் விளையாடாத இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் முக்கிய தொடர்களில் திணறுவது தொடர்கதையாக உள்ளது.
பிசிசிஐ அதிரடி:
அதனால் ஏற்கனவே இந்திய வீரர்களை வெளிநாடுகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிசிசிஐ’யிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதற்கெல்லாம் செவி சாய்க்காத பிசிசிஐ தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களின் வாழ்வில் கை வைக்கும் வேலையை துவங்கியுள்ளது. அதாவது யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, பதான் சகோதரர்கள், ராபின் உத்தப்பா போன்றவர்கள் சமீபத்திய வருடங்களில் ஓய்வு பெற்று லெஜெண்ட்ஸ் லீக் போன்ற வெளிநாட்டு தொடர்களில் விளையாடி வருகின்றனர்.
அதில் லேட்டஸ்டாக 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற கையுடன் ஓய்வு பெற்ற ராயுடு அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரில் டெக்சாஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களில் விடைபெறும் இந்திய வீரர்கள் ஓய்வு பெற்று குறிப்பிட்ட சில வருடங்கள் நிறைவு பெறும் வரை வெளிநாட்டு தொடர்களில் விளையாட கூடாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வர ஜூலை 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற உயிர்மட்ட குழுவில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் ராயுடு, ரெய்னா போன்ற வீரர்களுக்கு இனிமேல் இந்திய அணியில் 100% வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமையில் ஐபிஎல் தொடரிலும் மவுசு குறைந்து வருகிறார்கள். அதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினாலும் எந்த பயனுமில்லை என்பதாலேயே வெளிநாடுகளில் விளையாடி தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக முன்கூட்டியே ஓய்வு முடிவை அறிவிக்கின்றனர். அந்த நிலைமையில் சர்பராஸ் தான் போன்ற உள்ளூர் தொடர்களில் அசத்தும் இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐ காலம் கடந்த இந்த முன்னாள் வீரர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் இப்படி ஒரு முடிவை எடுக்க தயாராகியுள்ளது என்றே சொல்லலாம்.
ஏனெனில் ஓய்வு பெற்ற சில வருடங்கள் காத்திருந்து 40 – 42 வயதை தாண்டிவிட்டால் வெளிநாடுகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு. அவர்களுக்கு பறிபோய்விடும். அந்த வேலையை செய்ய தயாராகும் பிசிசிஐ எங்களுடைய மாதாந்திர பென்ஷன் தொகையை மட்டும் நம்பி வாழுங்கள் என்ற வகையில் இந்த முடிவை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.