சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 20 வயது இளம் பந்துவீச்சாளரான மதிஷா பதிரனா கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரின் பவுலிங் ஆக்ஷன் மலிங்கா போலவே இருப்பதால் ரசிகர்கள் பதிரனாவை குட்டி மலிங்கா என புகழ்ந்து வருகின்றனர். இறுதி ஓவர்களில் இவரைப் பயன்படுத்தும் தோனியின் நம்பிக்கையை இந்த சீசன் முழுவதும் அவர் காப்பாற்றி ரன்களைக் கட்டுப்படுத்தியும் விக்கெட்களை வீழ்த்தியும் வருகிறார்.
பதிரனா பற்றி சில வாரங்களுக்கு முன்னர் பேசிய தோனி “பதிரனா, இலங்கை அணியின் சொத்தாக எதிர்காலத்தில் இருப்பார். ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடக் கூடாது. சிவப்பு பந்து போட்டிகளுக்கு அவர் ஏற்றவர் இல்லை. அவரை ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கு மட்டும் இலங்கை வாரியம் பயன்படுத்த வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
ஆனால் தோனி கூறியதை மறுத்திருந்த இலங்கை முன்னாள் வீரர் லசித் மலிங்கா, “மூன்று வடிவிலான போட்டிகளிலும் பதிரனா விளையாட வேண்டும். அவர் குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகளாவது விளையாடினால்தான் அவருடைய பார்மைக் கண்டறிய முடியும்” எனக் கூறியிருந்தார். இது சில நாட்களுக்கு முன்பு விவாத பொருளாக மாறியது.
இந்த நிலையில் தோனியின் கருத்தே சரி, மலிங்காவின் கருத்து ஏற்புடையதல்ல என்பதை பறைசாற்றும் வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமீந்தா வாஸ், பதிரனா குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார். சமீந்தா வாஸ் இதுபற்றி கல்ஃப் நியூஸ் ஊடகத்திடம் பேசும் போது “நான் ஒரு வருடத்திற்கு முன்பு இலங்கை கிரிக்கெட்டில் பணிபுரிந்தேன்.
நான் அவர்களிடம் இதையே சொன்னேன். பதிரனா போன்ற ஒரு நபர் பாதுகாக்கப்பட வேண்டும், அவர் எல்லா வடிவங்களிலும் விளையாடினால், அவரின் பௌலிங் ஆக்ஷனால் கண்டிப்பாக சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்க மாட்டார். அவரின் பவுலிங் ஆக்ஷன் எளிதானது இல்லை. மிகவும் கடினமான ஒரு தனித்துவமான ஆக்ஷன்.
இதையும் படிக்கலாமே: பெங்களூர் அணிய விட்டு கிளம்புங்க கோலி. இந்த டீம்ல போய் சேந்துக்கோங்க – சூட்டோடு சூட்டாக கெவின் பீட்டர்சன் போட்ட ட்வீட்
அதனால் அவரின் ஃபிட்னஸ் முக்கியப் பிரச்சனையாக வரும். நான்கு ஓவர்கள் பந்துவீசுவது சரிதான். அதற்கு மேல் அவர் பந்துவீசினால் பிரச்சனை வரும். அவர் விஷயத்தில் தோனி சொன்னதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.