அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்க இருந்த 16 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியானது மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இருந்தாலும் மைதானத்தில் மழைநீரை விரைவாக வெளியேற்ற போதுமான நவீன வசதிகள் இருப்பதால் மழை நின்றதும் விரைவாக போட்டி துவங்கும் என்றும் கட்டாயம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த போட்டி முழுவதுமாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2 ஆவது கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் குஜராத் டைட்டன்ஸ் அணி காத்திருக்கிறது. அதேபோன்று இந்த போட்டியில் வெற்றி பெற்று 5 ஆவது முறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறது சிஎஸ்கே.
இதன்காரணமாக இந்த இறுதிப்போட்டியானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தோல்வி உறுதி செய்யப்ட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு போஸ்டர் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில் சி.எஸ்.கே அணி இறுதிப்போட்டியில் தோற்று இரண்டாவது இடம் பிடித்ததாக மைதானத்தில் ஒளிரவிடப்பட்டிருந்தது. இப்படி சி.எஸ்.கே அணி போட்டிக்கு முன்னதாகவே தோற்றதாக வெளியாகிய இந்த புகைப்படத்தால் ரசிகர்களும் இது மேட்ச் பிக்ஸ்ங்சா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இதில் இருக்கும் உண்மை யாதெனில் மைதானத்தில் இருந்த அந்த மின் பலகையில் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யவே இரு அணிகளின் பெயரையும் வைத்து வெற்றி தோல்விகளின் முடிவுகளை ஒளிரவிட்டு சோதனை செய்துள்ளனர். அப்படி சோதனை செய்யப்பட்ட புகைப்படமே தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆகையால் இந்த புகைப்படத்தை வைத்து யாரும் எந்த முடிவுக்கும் வர வேண்டிய அவசியம் இல்லை. இறுதி போட்டியில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும். அதே சமயம் மைதானத்தில் மழையும் விட்ட பாடில்லை. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ஓவர் குறைக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டியை சரியான நேரத்தில் துவங்க முடியவில்லை என்றால் நாளை போட்டி நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.