இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமம் செய்தது. கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இம்முறை மீண்டு வந்து கோப்பையை வென்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது
இந்த தொடரில் சென்னை அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான டேவான் கான்வே முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் முக்கியமான இந்த இறுதிப்போட்டியில் 25 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 47 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தார்.
அவர் அளித்த துவக்கத்தை அப்படியே பின்தொடர்ந்த சென்னை வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப் பந்தில் வெற்றியும் பெற்றனர். இதன் காரணமாக இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது டேவான் கான்வேவுக்கு வழங்கப்பட்டது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான டேவான் கான்வே சென்னை அணிக்காக அறிமுகமானதிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு அனைவரும் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தற்போது இந்த இறுதிப் போட்டி குறித்து பேசியுள்ள டேவான் கான்வே கூறுகையில் :
சாய் சுதர்சன் நம்ப முடியாத வகையில் இறுதி போட்டியில் விளையாடினார். ஜடேஜா இந்த போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் எங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது எனக்கு வழங்கப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை விட சாய் சுதர்சன் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என டேவான் கான்வே கூறினார். சிஎஸ்கே அணி ஒரு குடும்பமாக மிகச் சிறப்பான சூழலை ஒவ்வொரு வீரருக்கும் அளிக்கிறது என டேவான் கான்வே கூறியது குறிப்பிடத்தக்கது.