ஏசியன் கேம்ஸ் போட்டி தற்போது நடைபெற்று வரும் வேளையில் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஏற்கனவே இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் இலங்கையை வென்று தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில் தற்போது ஆடவர் அணி தனது முதல் போட்டியை இன்று விளையாடியுள்ளது. நேரடியாக கால் இறுதிக்கு வந்த இந்திய அணியோடு லீக் போட்டியில் விளையாடி அதன் மூலம் கால் இறுதிக்கு இடம்பெற்ற நேபால் அணி மோதியது.
ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஜெய்ஸ்வாலின் அதிரடி பேட்டிங் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் நூறு ரண்களும், ரிங்கு சிங் 37 ரன்களும் ருதுராஜ் மற்றும் சிவம் துபே 25 ரண்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய நேபால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியின் மூலம் தமிழக வீரரான சாய் கிஷோர் முதல் முறையாக இந்தியா சார்பாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். அதன் காரணமாக அவர் அதிக உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார். இதில் அவர் நான்கு ஓவர்களை வீசி 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
சாய் கிஷோர் உடைந்து அழுவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவர அதற்கு பதில் அளித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளது பின்வருமாறு,
கடினமாக உழைக்கக் கூடியவர்களுக்கு அந்த உழைப்பிற்கான பலனை கடவுள் நிச்சயம் தருவார், சாய் கிஷோர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் போன்று டாமினேட் செய்யக் கூடியவராக நான் பார்த்து உள்ளேன்.
இன்று காலை எழுந்தவுடன் அவருடைய பெயர் ஏசியன் கேம்ஸ் பிளேயிங் லெவலில் இருந்ததைப் பார்த்து நான் எமோஷனல் ஆகிவிட்டேன். நாம் சிலர் தங்கள் வாழ்வில் அடுத்தடுத்து கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று நினைப்போம். அப்படியான என் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் சாய் கிஷோர்.
அவர் தனது பேட்டிங்கை மேம்படுத்திய விதத்தில் இருந்து அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டுகளையும் விளையாடக் கூடிய வீரராக மாறி உள்ளார். அவரை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கலாம் ஆனால் இப்போது அவர் இந்திய அணியின் அங்கமாக இருப்பதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் இருந்து இதை யாராலும் பறிக்க முடியாது. அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள் சாய் என்று தினேஷ் கார்த்திக் அந்த பதிவில் கூறி உள்ளார்