இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. தற்போது ஆரம்பமாகி உள்ள டி 20 உலக கோப்பைத் தொடருடன் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.
இதனால், அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களும் சேகரிக்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டு வீரராக இருப்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், அவை வெறும் வதந்தி என அதிகாரபூர்வமாக தெரிய வந்த நிலையில், டிராவிட்டை போல ஒரு முன்னாள் இந்திய வீரர் தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று உறுதியான தகவலும் வெளியாகி இருந்தது.
அது மட்டுமில்லாமல், கவுதம் கம்பீராக இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர், இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். தொடர்ந்து, இந்த ஐபிஎல் சீசனில் அதே அணியின் ஆலோசகராக இணைந்திருந்த கவுதம் கம்பீர், மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல உதவி இருந்தார்.
ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்வது தான் எங்களின் லட்சியம் என்றும், அணிக்குள் சீனியர் வீரர், ஜூனியர் வீரர் என்ற பாகுபாடு இருக்காது என்றும் கம்பீர் குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னது போலவே, இறுதி போட்டி வரைக்கும் பலமாக நடை போட்ட கொல்கத்தா, கோப்பையையும் சொந்தமாக்கி இருந்தது.
இதனால், இந்திய அணியிலும் பயிற்சியாளராக கம்பீர் இணைந்தால் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட பெரிய உந்துசக்தியாக விளங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி பேசி இருந்த கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பெருமிதம் கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி இருக்கையில், அவரை பற்றி தினேஷ் கார்த்திக் சொன்ன கருத்து ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சிலர், நேர்காணல் ஒன்றில் இணைந்து தோன்றி இருந்தனர்.
அப்போது கம்பீர் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், “நான் பார்த்ததிலேயே மிகவும் சோம்பேறியான விளையாட்டு வீரர் என்றால் நிச்சயம் கவுதம் கம்பீர் தான். ஒரு முறை கம்பீர் தனது அறையில் இருக்க நான் அதனை கடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை அவரது அறையில் கம்பீர் அழைத்தார். நானும் உள்ளே செல்ல, அவர் கட்டிலில் படுத்து கொண்டிருந்தார்.
என்னிடம், ரிமோட் அங்கே இருக்கிறது. டிவி சேனலை மாற்றி விட்டு போ என என்னிடம் கூறினார். ஒருவர் சோம்பேறியாக இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது. இரண்டு அடி நடந்திருந்தால் அவரே ரிமோட் எடுத்து மாற்றி இருக்கலாம்” என தினேஷ் கார்த்திக் கூறினார். இதனை கேட்டதும் அங்கிருந்த அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டனர்.
இன்று இந்த அளவுக்கு ஆக்டிவாக இருக்கும் கவுதம் கம்பீர், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரத்தில் இப்படி தான் இருப்பார் போல என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.