சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் 16-ல் ஆர்சிபி வீரர் கோலியும், லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீரும் ஆக்ரோஷமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பாக அப்போது பல மூத்த வீரர்கள் இருவரையும் கண்டித்து பேசினர். கம்பீரும் கோலியும் களத்தில் மோதிக் கொள்வது இது முதல் முறையல்ல.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷெஹ்சாத் “நான் பார்த்ததில், அந்த சம்பவம் மிகவும் வருத்தமாக இருந்தது. நவீனுக்கும் விராட் கோலிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயங்கள் கிரிக்கெட்டில் சாதாரணம்தான். ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், கம்பீர் ஏன் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த வீரரான கோலியைக் குறிவைக்கிறார், என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “கோலியுடன் கம்பீருக்கு பிரச்சனைகள் இருந்ததை கடந்த காலங்களிலும் நாம் பார்த்தோம். அவர் கோலி மீது பொறாமைப்படுகிறார், அவருடன் ஒரு சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு தேடுகிறார். கோலியிடம் யாரும் தவறாக நடந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. அவர் ஒரு ஜாம்பவான். நீங்கள் அவரை மதிக்க வேண்டும்.
கம்பீர் சாக்கு போக்குகளை கூறி வருகிறார். ஒருமுறை தனது ஆட்ட நாயகன் விருதை கோலியுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார். விராட் உங்களிடம் கேட்டாரா? அல்லது உங்கள் விருதை அவருக்கு வழங்கியதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் கோலியிடம் தவறாக நடந்துகொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறீர்களா? ” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “கோலி அடைந்த மரியாதை மற்றும் வெற்றியை கம்பீரால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். இவ்வளவு இளம் வயதில் அவர் சாதித்ததை கம்பீரால் தனது முழு வாழ்க்கையிலும் சாதிக்க முடியவில்லை. நீங்கள் உண்மையிலேயே ஒரு பெரிய வீரராக இருந்தால் அல்லது இதயத்தில் பெரியவராக இருந்தால், உங்கள் அனுகுமுறை இப்படி இருக்காது.” என கம்பீரை தாக்கியுள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு ஷெஹ்சாத் “கம்பீர் தன்னுடைய தவறை உணர்ந்து கோலியிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு வீரர்களுக்கிடையில் மோதலில் குதித்த அணி நிர்வாகத்தின் பணியாளர்களை நான் பார்த்ததில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.