ஐபிஎல் சீசன் மிக முக்கியமான ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான்கு அணிகளில் ஒன்று தற்போது இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக விரைவில் மாறவுள்ளது. இதுவரை இரண்டு முறை ஐபிஎல் கோப்பை கைப்பற்றிய கொல்கத்தா அணியும், தலா ஒரு முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ள ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளும், 16 சீசனில் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் ஆர்சிபி அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இதில் கொல்கத்தா அணி இந்த சீசனில் அதிக பலத்துடன் திகழ்வதால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் அதே வேளையில் மற்ற மூன்று அணிகளையும் நிச்சயம் குறைத்து எளிதில் எடை போட்டு விட முடியாது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சில முக்கியமான வீரர்கள் இருந்து வருவதால் தோல்வி பாதையில் இருந்து மீண்டு வந்து நிச்சயம் கம்பேக் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங் லைன் அப்பை சமாளிப்பது எதிரணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இந்த மூன்று அணிகளை தவிர இந்த சீசனில் அதிக கவனம் ஈர்த்துள்ள அணி என்றால் நிச்சயமாக ஆர்சிபி தான். கடந்த 16 வருட ஐபிஎல் வரலாற்றில் பலமுறை பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் சில தவறுகள் காரணமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து தவற விட்டு வந்தனர்.
ஆர்சிபி அணி ஒரு சில முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்து இருந்தார்கள். இந்த சீசனிலும் கூட அவர்கள் பிளே ஆப் முன்னேற மாட்டார்கள் என்று தான் கருதப்பட்டது. ஆனால் 6 போட்டிகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது பிளே ஆப் முன்னேறி அனைத்து அணிகளுக்கும் சவால் விட்டும் வருகிறது.
இப்படி நான்கு அணிகளும் பலமாக இருக்கும் நிலையில் யார் இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதை பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் இறுதிப்போட்டியில் ஆடத்தகுதி உள்ள அணிகள் எது என்பது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“இந்த முறை ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதும் என நான் நினைக்கிறேன். அப்படி அது நடந்தால் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் மீண்டும் ஒரு முறை எதிர்கொள்வது இந்த சீசனில் நடைபெறும். ஒவ்வொரு ரன்னிற்கும் ஆர்சிபி அணி கடினமாக உழைத்து வருவதால் அவர்கள் தான் இந்த முறை கோப்பையை கைப்பற்றுவார்கள் என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் எனர்ஜியும் பேஷனும் தொடர்ந்து செய்லபடுத்தினால் நிச்சயம் ஆர்சிபி அணியை தோற்கடிப்பது கடினமான விஷயம்” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.