பாகிஸ்தானுக்கு தற்போது நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடர் ஒரு சிறந்த தொடராக அமையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. லீக் சுற்றில் குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகளை வீழ்த்தி விட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக முதலில் நடந்த போட்டியிலேயே அவர்கள் தோல்வி அடைந்திருந்த நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பு அப்போதே மங்கத் தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த அவர்கள் அடுத்த இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தனர்.
அந்த அணியில் முக்கியமான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவரும் இருந்தபோதிலும் அவர்களால் முக்கியமான நேரத்தில் வெற்றிகளை பெறமுடியாமல் தொடர்ந்து திணறி வருவது ரசிகர்களையும் கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இனிவரும் ஆசிய கோப்பை உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களில் அணியில் உள்ள தவறுகளையும், ஃபார்மில் இல்லாத வீரர்களையும் மாற்றி விட்டு நிச்சயம் நல்லதொரு கம்பேக்கை பாகிஸ்தான் அணி சர்வதேச அரங்கில் கொடுக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்வியால் வெளியேறி இருந்ததால் பல பாகிஸ்தான் ரசிகர்களால் அதனை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் ஆடும் மைதானங்களில் நேரடியாக வந்து வீரர்கள் மீது விமர்சனங்களை நேரடியாக மேற்கொண்டு வந்தனர்.
அப்படி ஒரு சூழலில் தான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் ஒரு ரசிகருடன் சண்டை போடுவது தொடர்பான வீடியோ வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹாரிஸ் ரவூப் மற்றும் அவரது மனைவியுடன் தங்கி இருந்த ஹோட்டலின் வெளியே ரசிகர் ஒருவர் குடும்பத்தினரை பற்றி ஏதோ தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதனை கேட்டதும் உடனடியாக கோபம் அடைந்த ஹாரிஸ் ரவூப், மனைவி தடுத்த பின்னும் அதனை மீறி நேரடியாக அந்த ரசிகரை அடிப்பதற்காகவும் பாய்ந்து விட்டார். ஆனால் அங்கிருந்த மற்ற ரசிகர்கள் அனைவரும் இருவரையும் தடுத்து நிறுத்த அந்த இடமே சில நொடிகள் பரபரப்பாக அமைந்திருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரிய அளவில் ஹாரிஸ் மற்றும் ரசிகருக்கு எதிர்ப்பைக் கிளப்ப தற்போது தனது சமூக வலைத்தளத்தில் இதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.
“இந்த விவகாரத்தை நான் சமூக வலைத்தளங்களில் பெரிதாக எடுத்துக்கொண்டு வரவேண்டாம் என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் இந்த வீடியோ தற்போது வெளியாகி இருப்பதால் அதன் நிலைமை என்ன என்பதை சரி செய்ய வேண்டும் என்பதும் அவசியம் என்று நான் உணர்கிறேன். பாகிஸ்தான் வீரராக பொதுமக்களிடம் இருந்து அனைத்து விதமான கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.
எங்களுக்கு ஆதரவாக இருக்கவும், எங்களை விமர்சனம் செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை விமர்சித்தால் அதற்கு பதிலளிக்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். வீரரின் குடும்பத்திற்கு நீங்கள் மரியாதை அளிப்பது மிகவும் முக்கியம்” என இந்த சண்டை பற்றி தனது விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ரவூப்.