சில தினங்களுக்கு முனன்ர் நடைபெற்ற லக்னோ மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். அந்த போட்டியிலும் பேட்டிங்குக்கு 11 ஆவது ஆளாகதான் வந்தார் ராகுல். அதற்கடுத்த போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இப்போது அவர் மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் மும்பையில் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் காயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது. ஆனால் ராகுலின் காயம் பிசிசிஐ-யோ, லக்னோ அணி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கே எல் ராகுல் அந்த போட்டியில் விளையாடவில்லை என்றால் அவருக்குப் பதிலாக சி எஸ் கே தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.
கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிவரும் ருத்துராஜுக்கு இன்னும் தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளுக்குமான வீரராக உருவாகி வரும் ருத்துராஜ் இந்த வாய்ப்பைப் பெற்றால், தன் திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதெ போல காயமடைந்துள்ள மற்றொரு பவுலரான ஜெயதேவ் உனாட்கட்டுக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் இடம்பெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.