சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பெருமளவில் சொதப்பியது என்றே கூறலாம். அதன் காரணமாக படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி அடுத்த தொடர் ஒரு மாதத்துக்குப் பிறகுதான். ஜூலை மாதத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர்களில் இந்திய அணியின் தேர்வில் பல அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடிஐ தகவலின் படி, சிவசுந்தர் தாஸ் தலைமையிலான தேர்வுக் குழு மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அடுத்த WTC சுழற்சியில் சில மாற்றங்களை விரும்புவதால் டெஸ்ட் போட்டிகளில் சேதேஷ்வர் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே போல டி20 போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. 5 டி20 போட்டிகளுக்கான அணி முற்றிலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று PTI தகவல் கூறியுள்ளது. இதனால் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்றோர் டி 20 அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் கடந்த சில மாதங்களாக தேர்வு செய்யப்படுவதில்லை. அதனால் ஹர்திக் பாண்ட்யாவே அந்த அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது. டி 20 அணியில் ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடிய ருத்துராஜ் மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
தொடை அறுவைசிகிச்சையில் இருந்து கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. அப்படியே அவர் அணிக்கு திரும்பினாலும் அவர் அணித்தலைவருக்கான போட்டியில் இல்லை. கேப்டன் ரோஹித் ஷர்மா, அவரது தற்போதைய ஃபார்ம் மற்றும் உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி, அடுத்த WTC சீசன் வரை முடிப்பாரா என்ற கேள்வி உள்ளது.
இதையும் படிக்கலாமே: உலக டெஸ்ட் போட்டிலாம் சாதாரணம் பாஸு. ஐபிஎல்-ல ஜெய்க்கறது தான் கஷ்டம் – தோல்விக்கு பிறகும் மீசையில் மண்ணு ஒட்டாதது போல பேசிய கங்குலி
அவருக்கு அப்போது கிட்டத்தட்ட 38 வயதாகி இருக்கும். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த பரிசீலனையில் இருக்கும் பூம்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே காயத்தால் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.