வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியை பிசிசிஐ நேற்று (ஜூலை 5ஆம் தேதி) வெளியிட்டுள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்த ஸ்குவாடில் ரிங்கு சிங்கின் பெயர் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அவரது பெயர் இந்த அணியில் இடம்பெறாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிங்கு சிங்கை பொருத்தவரை ஐபிஎல் 2023-லல் பலரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடினார். இடது கை பேட்ஸ்மேனான இவர் ஐபிஎல் போட்டியில் 474 ரன்கள் குவித்து இருந்தார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 59.25 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 149.52 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
25 வயதான இவர் கொல்கத்தா அணிக்காக பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அணிக்கு மிகப்பெரிய ஒரு நல்ல பெயரை தேடித் தந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அவர் அடித்த ஐந்து சிக்ஸர்கள் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் அஜித் அகார்கர் தலைமை தேர்வாளராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் போன்றோரின் பெயர்களும் இடம் பெறவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் இந்த போட்டியில் செயல்பட உள்ளனர்.
இந்த நிலையில் ரிங்கு சிங்கின் பெயர் அணியில் இடம்பெறாமல் இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இர்பான் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்றில் “ரிங்கு சிங்கிற்கான காலம் விரைவில் வரும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம், ரிங்கு சிங் நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என்று அவர் எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
நேற்று வெளியான அணியின் விவரம்:
இஷான் கிஷன் (கீப்பர், பேட்ஸ்மேன்), சுப்மன் கில் (பேட்ஸ்மேன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (பேட்ஸ்மேன்), திலக் வர்மா (பேட்ஸ்மேன்), சூரியகுமார் யாதவ் (பேட்ஸ்மேன்), சஞ்சு சாம்சன் (கீப்பர், பேட்ஸ்மேன்), ஹார்டிக் பாண்டியா (ஆல் ரவுண்டர்), அக்சர் படேல் (ஆல் ரவுண்டர்), யுஸ்வேந்திர சாஹல் (ஸ்பின்னர்), குல்தீப் யாதவ் (ஸ்பின்னர்), ரவி பிஷ்னாய் (ஸ்பின்னர்), அர்ஷ்தீப் சிங் (பாஸ்ட் பவுலர்), உம்ரான் மாலிக் (பாஸ்ட் பவுலர்), ஆவேச கான் (பாஸ்ட் பவுலர்), முகேஷ் குமார் (பாஸ்ட் பவுலர்).