நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் பிரதர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ராஜஸ்தானின் சஹால் கடைசி ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசி கொல்கத்தாவின் ரன்ரேட்டை குறைத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி, 4 விக்கெட்கள் வீழ்த்தி 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இதனால் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 149 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தானுக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 151 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இறங்கிய ராஜஸ்தான் அணியின் 21 வயது இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தனது அதிரடி இன்னிங்ஸை தொடங்கினார். நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக 26 ரன்கள் சேர்த்தார். அடுத்தடுத்து வந்த ஓவர்களிலும் அவர் அதிரடி தொடர மின்னல்வேகத்தில் அரைசதம் அடித்து மைதானத்துக்கே மயிர்க்கூச்செறியும் தருணத்தை உருவாக்கினார்.
இதே அதிரடியைத் தொடர்ந்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தன்னுடைய வேகத்தைக் கொஞ்சம் குறைத்தார். இன்னிங்ஸ் முடியும் போது 47 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம்.
போட்டி முடிந்ததும் பேசிய ஜெய்ஸ்வால், “களத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்பது என் மனதில் எப்போதும் நினைப்பேன். இன்று ஒரு இனிமையான உணர்வு. நான் விரும்பிய அனைத்தும் நடக்கிறது என்று இல்லை. நான் என்னை நன்றாக தயார் செய்துகொள்கிறேன். வின்னிங் ஷாட் ஒரு சிறந்த உணர்வு. நான் களத்தில் இருந்து இன்னிங்ஸை முடிக்க விரும்பினேன்.
போட்டியை வெல்வதே எனது குறிக்கோள். இன்று நான் ஆசீர்வதிக்கப்பட்டனாக உணர்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். சதத்தைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. நான் நினைத்ததெல்லாம், விரைவாக போட்டியை முடித்து ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதைதான்.” எனக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றால்தான், ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளதால், அவர்களுக்கு ரன்ரேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.