ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாஷோர் என்கிற இடத்தில் நடந்த பயங்கரமான ரயில் விபத்து தற்போது நாடு முழுவதும் மக்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் மூன்று ரயில்கள் மோதிய இந்த விபத்தில் சிக்கி 238 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும், 900 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் இன்னும் ஒரு சில எண்ணிக்கை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்று கூறப்படுவதால் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தாக இந்த விபத்து மாறியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நாடு முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நட்சத்திர வீரருமான விராட் கோலியும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வருத்தத்தினை பகிர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களும் இந்த விபத்து குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 15 தீயணைப்பு குழுக்களும், 30 மெடிக்கல் குழுக்களும், 200 போலீஸ்சார்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ் என தற்போது மீட்பு பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயத்தால் சிக்கியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் என அவர்களது குடும்பத்திற்கு பிரதம மந்திரி நலத்திட்டத்தில் இருந்து நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கோர விபத்திற்கு பின்னர் தற்போது தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக விராட் கோலி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது : ஒடிசாவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனைகளை அனுப்பி வைக்கிறேன்.
நிச்சயம் காயம் அடைந்தவர்கள் வேகமாக குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என உருக்கமான பதிவை விராட் கோலி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்று பயிற்சியினை மேற்கொண்டு வரும் அவர் அங்கிருந்து இந்த பதிவினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி அந்த ட்வீட் காலை 10 மணி 42 நிமிடங்களுக்கு பதிவிடப்பட்டுள்ளது. அதை லண்டன் நேரத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் காலை 6 மணி வாக்கில் இருக்கும். கோலி ரசிகர்கள் உலகம் முழுக்க உள்ளதால் அவர் போட இந்த ஒரு ட்வீட் மூலம் இந்த நிகழ்வு குறித்து தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து கூட சிலர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டீவீட்டில் கோலி தன் வருத்தத்தை வெளிப்படுத்திய அதே வேலையில், ட்வீட் மட்டும் போதுமா, அந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உங்கள் ஒரு மாத சம்பளத்தை தரலாமே என்று சிலரும், இதற்க்கு மட்டும் ட்வீட் வருகிறது ஆனால் சமீபத்தில் இந்திய மகளிர் ரெஸ்லர் மீடூ புகார் தெரிவித்துள்ளார்கள் அதற்க்கு எந்த டிவீட்டும் இல்லையா போன்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.