ஜூன் 12ஆம் தேதி தொடங்கி சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது டிஎன்பிஎல் போட்டிகள். ஐபிஎல் வீரர்களான சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், அஸ்வின் இபப்டி பலரும் இந்த டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்று ஆட்டத்தின் விறுவிறுப்பை நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே உள்ளனர். இந்த நிலையில் நேற்று நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நெல்லை அணி, பீல்டிங் செய்ய தீர்மானித்தது. கோவை அணியை பொறுத்தவரை துவங்க ஆட்டக்காரரான சச்சின் டக் அவுட் ஆக, ஆரம்பமே அந்த அணிக்கு சருக்கலாக இருந்தது. எனினும் அந்த அணியின் நட்சத்திர வீரரான சாய் சுதர்சன் அந்த அணியை தாங்கி பிடித்தார்.
அவர் 52 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். அதே போல துவக்க ஜோடிகளின் ஒருவரான சுரேஷ் குமார் 24 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.
182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நெல்லை அணி ஆரம்பத்தில் தடுமாறியது என்றே சொல்லலாம். அந்த அணியின் துவக்க ஜோடிகளின் ஒருவரான அருண் கார்த்திக் 0 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், துவக்க ஆட்டக்காரராக ஸ்ரீ நிரஞ்சன் ஆர் 29 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் ஜி. அஜிதேஷ் தனது அதிரடியான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். அவர் வெறும் 60 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார். அதில் 8 சிக்ஸர்களும் 7 பௌண்டரிகளும் அடக்கம். கோவைக்கு ஒரு சாய் போல நெல்லைக்கு அஜிதேஷ் அமைந்தார். அவருடைய அதிரடியான ஆட்டத்தால் போட்டி விறுவிறுப்பாக நகர்ந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதில் சிக்ஸர்களும் பறந்தன ஆனலும் அதிரடியாக ஆடிவந்த அஜிதேஷ் அந்த ஓவரில் அவுட் ஆக, ஆட்டம் மேலும் சூடு பிடித்தது. இந்த நிலையில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் எம் பொய்யாமொழி அந்த இரண்டு பந்துகளையும் சந்தித்தார். அதில் ஒரு பந்தை சிக்ஸராக விளாசிய அவர், மற்றொரு பந்தில் ஒரு ரன்கள் எடுத்து ஆட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டார்.