இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 296 ரன்களில் சுருண்டது.
இதன் காரணமாக 173 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையுடன் தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஜோடி போட்டியின் ஆரம்பத்திலேயே பிரிந்தது.
அந்த வகையில் இந்த இரண்டாவது இன்னிங்சின் நான்காவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் டேவிட் வார்னரை அவர் 1 ரன்னில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். இந்நிலையில் டேவிட் வார்னர் ஆட்டம் இழக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் மூன்றாவது பேட்ஸ்மேன் லாபுஷேன் தூங்கிக் கொண்டிருந்ததும் அதன் பின்னர் வார்னர் ஆட்டம் இழந்ததும் உடனடியாக எழுந்து களத்திற்கு வந்ததும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் விதத்தில் இருந்தது.
173 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையில் அவர்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் அதனை லேசாக எடுத்துக் கொண்டு ஓய்வறையில் முழுவதுமாக தயாராகி அமர்ந்த நிலையில் லாபுஷேன் சேரில் அமர்ந்த படி ஒரு குட்டி தூக்கம் போட்டு கொண்டிருந்தார்.
அவர் தூங்குவதை நேரலையில் காண்பித்த அடுத்த சில நொடிகளிலேயே வார்னர் ஆட்டமிழந்ததால் அரை தூக்கத்தில் இருந்து எழுந்த அவர் நேரடியாக களத்திற்கு ஓடி வந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணியானது 3 ஆம் நாள் தேநீர் இடைவெளியின் போது 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை விட 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.