இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர், உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராகும். இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது முறையாக வென்று சாதனை புரிந்திருந்தது. ஐபிஎல் தொடரில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு சீசனிலும் ஏராளமான இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சர்வதேச அளவுக்கு உயரும் ஒரு இடமாக கருதப்படுவதால் தான்.
பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ரவி பிஷ்னோய், ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என பல வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் தான் சர்வதேச அணிக்குள்ளும் நுழைந்தார்கள். ஐபிஎல் தொடர் இப்படி ஒரு அழகான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் அதே வேளையில், நிறைய சண்டைகள் கூட இதில் நடப்பதுண்டு. அப்படி இருக்கையில், 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் யாராலும் மறந்து போக முடியாத சண்டை என்றால் அது விராட் கோலி – நவீன் உல் ஹக் இடையே நடந்த சண்டை தான்.
பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ஆடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், பெங்களூர் அணி வீரர் முகமது சிராஜை சீண்டியதாக தெரிகிறது. இதனால் விராட் கோலியும் உள்ளே வர, நவீன் உல் ஹக்கிடம் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார். பின்னர் லக்னோ அணி ஆலோசகர் கம்பீரும் உள்ளே வர, அவருக்கும் கோலிக்கும் இடையே சிறிய மோதல் நடந்தது.
இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைகளை உண்டு பண்ண, பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதில் பெங்களூர் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில், கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் நவீன் உல் ஹக் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி அனைத்திற்கும் காரணமாக அமைந்தது. கோலி அவுட்டான சமயத்தில், டிவியில் ஐபிஎல் பார்த்து கொண்டிருந்த நவீன், தனதருகே சில மாம்பழங்களை வைத்து “Sweet Mangoes” என குறிப்பிட, அவர் கோலி அவுட்டை தான் கொண்டாடுகிறார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இதன் பின்னர், நவீன் ஆடிய ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூட, ‘கோலி கோலி’ என ஆரவாரம் செய்து பரபரப்பை கிளப்பினர். கோலி மற்றும் நவீன் கூட எதிரி போல சித்தரிக்கப்பட்ட சூழலில், சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடர் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் நவீன் வந்த போது ‘கோலி’ பெயரை சொல்லி கத்த, கூட்டத்தை சைகையால் கட்டுப்படுத்தினர் கோலி. மேலும் நவீனுடன் கைகுலுக்கி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் இனி மைதானத்தில் கோலி என யாரும் கத்தமாட்டார்கள் என்றும் உறுதி கொடுத்தார்.
இதனிடையே அனைத்திற்கும் தொடக்கமாக அமைந்த அந்த மாம்பழ ஸ்டோரி குறித்து தற்போது மனம் திறந்துள்ள நவீன், தனக்கு மாம்பழம் வேண்டும் என லக்னோ அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும், கேட்ட நாளிலேயே கிடைத்த மாம்பழத்தை சாப்பிட்டு கொண்டு ஐபிஎல் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கோலி அவுட்டான அந்த தருணம் கூட தற்செயலான ஒன்று தான் என்றும், எனது ஸ்டோரியில் கூட மும்பை வீரர் தான் இருந்தாரே தவிர கோலி இருக்கவில்லை என கூறிய நவீன், மக்கள் தான் அதனை தவறாக எடுத்து சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.