நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்றுள்ள ஆஸி அணி கோப்பையைக் கைப்பற்றி மூன்று விதமான போட்டிகளிலும் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இந்த போட்டியில் ஆஸி அணி வெல்வதற்கு இந்திய அணியே ஒரு காரணமாக அமைந்தது. அணியில் அஸ்வினை எடுக்காதது, முதல் நாளில் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியது என சில தவறுகளை செய்து வெற்றியை தாரை வார்த்தது. அதனால் அதன் பின்னர் சரியாக விளையாடினாலும் போட்டியைக் கைப்பற்ற முடியவில்லை.
ஐந்தாம் நாள் தொடக்கத்தில் இந்திய அணி வெற்றி பெற 270 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 7 விக்கெட் இருந்தது. கோலி மற்றும் ரஹானே, களத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு வெல்வதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் கோலி விரைவாக விக்கெட்டை இழந்ததால் நிலைமை அப்படியே மாறி முதல் செஷனிலேயே ஆஸி அணி வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல முன்னாள் வீரர்களும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரை அணியில் எடுக்காதது மிகப்பெரிய தவறு என பேசியுள்ளனர். போட்டி நடந்த இங்கிலாந்தின் வானிலையும் இந்திய அணியை விட ஆஸி அணிக்கு கூடுதல் அனுகூலமாக அமைந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, இறுதிப் போட்டி நடத்தப்படும் விதம் குறித்து தன்னுடைய ஆலோசனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “இறுதிப் போட்டியில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருக்க வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்திலும் இங்கிலாந்திலும் மட்டுமே நடக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: அவர் ரொம்ப டேஞ்ஜரான ஆளு. அவரோட விக்கெட்ட எடுத்தது தான் எங்க வெற்றிக்கு திருப்பு முனையா அமைஞ்சது – வெற்றிக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
இருப்பினும் ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ், ரோஹித் ஷர்மாவின் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. அவரது பேச்சில் . “நாங்கள் ஏற்கனவே WTC டிராபியை வென்றுள்ளோம். WTC பைனலுக்கு 3 போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமல்ல, 16 போட்டிகள் கொண்ட தொடர்களும் இருக்கலாம். ஆனால் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதில் விளையாடிதான் வீரர்கள் பதக்கங்களை வெல்கிறார்கள்.” என்று பேசியுள்ளார்.