இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று மதியம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக நேகல் வாதேரா 64 ரன்கள் அடித்தார். அவரை தவிர்த்து எந்த ஒரு வீரரும் 30 ரன்கள் கூட அடிக்கவில்லை.
சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 ஓவர்களை வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக டேவான் கான்வே 44 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீரர் மதீஷா பதிரானாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய பதிரானா கூறுகையில் :
என்னுடைய பயணம் சென்னை அணியில் கடந்த ஆண்டு துவங்கியது. நான் ஒரு மாற்றுவீரராக அணிக்குள் வந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். ஆனால் இந்த சீசனில் அதிக போட்டிகளில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணியின் நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்த பந்துவீச்சு தான் டி20 கிரிக்கெட்டில் என்னுடைய சிறந்த பவுலிங் என்று நினைக்கிறேன். என்னுடைய இந்த பங்களிப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு நான் விக்கெட் வீழ்த்தும்போது அந்த விக்கெட்டை கொண்டாடுவது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஸ்டைலில் தான். ஏனெனில் நான் அவருடைய தீவிர ரசிகன் என பதிரானா கூறியது குறிப்பிடத்தக்கது.