இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து தற்போது பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு வீரர்கள் வாய்ப்புக்காக போட்டி போட்டு வருவதால் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற குழப்பமே ஏற்பட்டுள்ளது.
அதோடு முன்னணி வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளதால் அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்களா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் டாப் ஆர்டர் முழுவதுமே வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ரவீந்திர ஜடேஜா ஒருவர் மட்டுமே இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் வேளையில் டாப் ஆர்டரில் குறைந்தது இரண்டு இடது கை வீரர்களையாவது சேர்க்க வேண்டும் என்கிற கருத்து பலரிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி கூறுகையில் :
தற்போதைய இந்திய அணியில் டாப் 7-ல் மூன்று இடதுகை வீரர்களாவது நமக்கு தேவை. அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா பின் வரிசையில் இருந்தாலும் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன் ஆகியோரை உலகக் கோப்பை அணியில் இணைக்கலாம்.
ஏனெனில் அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோன்று இஷான் கிஷன் கடந்த ஆறு முதல் எட்டு (6-8) மாதங்களாக கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே இந்த மூவரையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
அதேபோன்று திலக் வர்மா அறிமுகமான சில போட்டிகளிலேயே தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி காட்டியுள்ளார். எனவே மிடில் ஆர்டரில் இடதுகை வீரராக நான்காவது இடத்திலும் அவரால் பொருந்த முடியும். என்னை பொறுத்தவரை அவரை தேர்வுக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.