இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறாதது பலரது மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ள இவ்வேளையில் அஸ்வினின் நெருங்கிய நண்பரும், உடற்தகுதி பயிற்சியாளருமான ராஜாமணி அஸ்வின் குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
அஸ்வினுடைய நண்பராகவோ அல்லது ட்ரெயினராகவோ நான் இதை கூறவில்லை எல்லோருடைய கருத்தாகவுமே நான் இதை கூறுகிறேன். உலகில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவர் ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் அணியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனாலும் அணியின் காம்பினேஷன் கருதியே கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் என அனைவருமே சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். வெளியில் இருந்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் அந்த போட்டிக்கு என்ன தேவையோ அதைத்தான் நிர்வாகம் முடிவு செய்து இந்த முடிவை எடுத்திருக்கும். எனவே அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடரின் போது கூட ஸ்டீவ் ஸ்மித்தை எவ்வாறு ஆட்டம் இழக்க வேண்டும் என்பது குறித்து என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார். இந்த போட்டியில் ஆடுகிறேனோ இல்லையோ ஆனால் நான் விளையாடினால் நிச்சயம் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி விடுவேன் என்று கூறினார்.
மேலும் நான் பந்துவீசும் போது நான் என்ன பந்து போடப்போகிறேன் என்பது குறித்து அவருக்கு (ஸ்டீவ் ஸ்மித்) க்ளூவே இருக்காது. நான் மிக எளிதாக அவரை வீழ்த்தி விடுவேன் என்று என்னிடம் சொன்னார். அதேபோன்று இந்த இறுதிப்போட்டி ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக எனக்கு போன் செய்த அவர் அடுத்த புரோகிராமை கொடுங்கள்.
நான் அடுத்து டி.என்.பி.எல் தொடருக்காக தயாராக வேண்டும் என்று முன்கூட்டியே பயிற்சிகளை என்னிடம் கேட்டு மேற்கொண்டார். அந்த அளவிற்கு அவர் தன்னை எப்போதுமே தயாராக வைத்திருக்கும் ஒரு வீரர் என ராஜாமணி கூறியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இருந்து தற்போது திரும்பவுள்ள அஷ்வின் அடுத்ததாக தமிழகத்தில் நடைபெற்றுவரும் டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.