சென்னை அணியின் 5வது ஐபிஎல் வெற்றி என்பது அந்த அணியை சேர்ந்த வீரர்களுக்கும் அந்த அணியின் ரசிகர்களுக்கும் எல்லையற்ற ஒரு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று கூறலாம். இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக உழைத்தது என்று கூறினாலும், கடைசி இரண்டு பந்துகளை சந்தித்த ஜடேஜா இந்த வெற்றியின் நாயகனாக பார்க்கப்படுகிறார்.
கடைசி இரன்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பௌண்டரி என அடித்து தனது சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் ஜடேஜா. தோனியின் ஆட்டத்தை காணவேண்டும் என்று எண்ணிய தோனி ரசிகர்கள் ஜடேஜா சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் பல முறை எண்ணியதை நாம் பார்த்தோம். ஆனால் அந்த ஒருவர் இன்று சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
அதே சமயம், தோனிக்கும் ஜடேஜாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது, தோனி சொல்வதை ஜடேஜா ஏற்கமறுக்கிறார் என்பது போன்ற சில தகவல்கள் இணையத்தில் வளம் வந்தன. அதற்கு ஏற்றார் போல சில வீடியோ காட்சிகளும் இடம் பெற்றன. அதே வேலையில் ஜடேஜா பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்று சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெற்றிக்கு பிறகு ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளார் ஜடேஜா. அந்த டீவீட்டில், “நாங்கள் இதை எல்லாம் செய்தது தோனி என்ற ஒற்றை மனிதருக்காக தான். உங்களுக்காக எதையும் செய்வோம் மகி பாய்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்கியதோடு சேர்த்து அவர் சில புகைப்படங்களையும் அதில் பதிவிட்டுள்ளார். அதில் அவரும் தோனியும் இணைந்து ஐபிஎல் கோப்பையை ஏந்தி இருப்பது போல ஒரு புகைப்படமும், குஜராத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜடேஜாவின் மனைவி ரிவாபா கோப்பையை வைத்திருப்பது போலவும், ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரும் அவருக்கருகில் அமர்ந்திருப்பது போலவும் ஒரு புகைப்படத்தை அதில் இணைத்துள்ளார்.
இவரின் இந்த ட்வீட் மூலம் தோனிக்கும் ஜடேஜாவிற்கு எந்த ஒரு விரிசலும் இல்லை. தோனிக்காக ஜடேஜா எதையும் செய்யக்கூடியவர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதை ரசிகர்களும் புரிந்து கொண்டு வெற்றியையும் ஜடேஜாவையும் கொண்டாடி வருகின்றனர். உண்மையில் பைனலில் இறுதி ஓவர் என்பது பலருக்கும் டென்ஷனாக தான் இருந்தது. ஜடேஜாவிற்கு மட்டும் அல்ல, அந்த ஓவரை வீசியவருக்கும் நிச்சயம் அந்த பிரஷர் இருந்திருக்கும். ஆனால் அதை சிறப்பாக கையாண்டு சிஎஸ்கே-வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற பெருமை ஜடேஜாவையே சாரும் என்பது தற்போது ரசிகர்களின் கருத்தாக உள்ளது