2023 உலகக் கோப்பைக்கு இன்னும் 99 நாட்கள் உள்ளன. முதல் முறையாக மதிப்புமிக்க உலகக் கோப்பை தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடத்துகிறது. பத்து அணிகள் 48 ஆட்டங்களில் விளையாடும் இந்த உலகக் கோப்பை தொடர் 46 நாட்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் உலகக் கோப்பை தொடரை பிரபலப் படுத்துவதற்காக பூமியில் இருந்து 1.2 லட்சம் அடி தொலைவில் விண்வெளியில் உலகக் கோப்பை டிராஃபி நிலை நிறுத்தப்பட்டது.
இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஐசிசி கோப்பை வென்றே ஆகவேண்டும் என்ற 10 ஆண்டு கனவை முடிவுக்கு கொண்டுவர பெரும் அழுத்தத்தில் இருக்கும். ஏனெனில் இந்திய அணி கடைசியாக 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதனால் இந்திய அணி மேல் கடுமையான விமர்சனங்கள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன. இந்த முறை தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் அனுகூலங்கள் உள்ளன.
2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக, பல வல்லுநர்கள் இந்தியாவின் வாய்ப்புகளை மதிப்பிட்டு தற்போதைய அணியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய நிகழ்வு ஒன்றில், 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்த முறை உலகக் கோப்பை அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜாவின் பங்கு குறித்து பேசியுள்ளார்.
அவரது பேச்சில் “இந்திய சூழ்நிலையில், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போல் இல்லாமல் விக்கெட் மாறும். நிறைய ஆல்ரவுண்டர்கள் களமிறங்குவார்கள் என்பதால், அக்சர் மற்றும் ஜடேஜா முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கிடையில், 2011 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக யுவராஜ் சிங் செய்ததை இந்த முறை ஜடேஜா செய்வார்.” எனக் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் யுவ்ராஜ் சிங். பவுலிங்கில் 15 விக்கெட்களையும் பேட்டிங்கில் 355 ரன்களையும் சேர்த்து அந்த தொடரின் தொடர் நாயகன் விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவ்ராஜ் சிங் போலவே சமீப ஆண்டுகளில் ஜடேஜா ஆல்ரவுண்டராகக் கலக்கி வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்து அவர் சிஎஸ்கே அணியை வெற்றி பெறவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.