உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. பின்னர் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேரத்தில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது. அதன்படி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா மற்றும் விராட் கோலி என யாருமே 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் மற்றும் அனுபவ வீரர் புஜாரா ஆகியோர் ஒரே மாதிரி பந்தில் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது. ஸ்காட் போலந்து வீசிய ஃபுல் லென்த் பந்தை கணிக்க தவறிய சுப்மன் கில் பந்தை தவறவிட்டு கிளீன் போல்டு ஆனார். அதேபோன்று புஜாராவும் கேமரூன் கிரீன் பந்தை விளையாடாமல் விட்டு கிளீன் போல்ட் ஆனார்.
இந்நிலையில் புஜாரா ஆட்டமிழந்த விதம் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி வருத்தம் தெரிவித்ததோடு புஜாராவையும் விளாசியுள்ளார். ஆனால் அவர் கில்லை பெரிதாக குறை ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில் : புஜாரா ஆட்டமிழந்த விதம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் ஃப்ரண்ட் பூட்டில் வந்தும் அவர் பந்தை தடுக்காமல் விட்டது தவறான ஒன்று.
சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரர் எனவே அவர் இது போன்ற தவறை செய்வதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் புஜாரா 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியவர். அதோடு சமீபத்தில் இங்கிலாந்து சென்று கடந்த 2 மாதங்களாக கவுண்டி போட்டியிலும் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.
இதையும் பார்க்கலாமே: சுப்மன் கில் மற்றும் புஜாரா விக்கெட் வீடியோ
இப்படி ஒரு சூழ்நிலையில் அவர் இங்கிலாந்து மண்ணில் பந்தை கணிக்காமல் தவற விட்டு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. பிரன்ட் புட்டில் அவர் முன்வந்து பந்தை தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஆஃப் ஸ்டம்ப் தெரியும்படி இருந்தும் பந்தை தடுக்காமல் விட்டது அவரது பேட்டிங் டெக்னிக்கில் உள்ள தவறை வெளிப்படையாக காட்டியுள்ளது. இதுபோன்ற தவறை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.