இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடந்த சில மாதங்களாகவே சரியான பார்மில் இல்லை. அடுத்தடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் நிலையில் அவரின் ஃபார்ம் அவுட் இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 332 ரன்களை மட்டுமே சேர்த்தார். அவரின் சராசரி 20+ தான். ஆனால் ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளோடு நாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை ஒப்பிடக்கூடாதுதான். சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் சதமடித்துள்ளார்.
இந்நிலையில்தான் இப்போது இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையில் தயாராகி வருகிறது. ஐபிஎல் முடிந்த கையோடு வீரர்கள் ஓய்வில்லாமல் லண்டனுக்கு சென்று அங்கு ஆஸி அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது வர்ணனை செய்து வருபவருமான சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்திறன் பற்றி பேசியுள்ளார். அவர், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் பலவீனமான ஷாட் பற்றி பேசியுள்ளார்.
அவரது பேச்சில் “டெஸ்ட் போட்டிகளில் நாம் பார்த்த வரையில் அவருக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சில சமயங்களில் புல் ஷாட் விளையாடும் போது அவர் அவுட் ஆகி வெளியேறுகிறார். அவருக்கு ஒரு ஷார்ட் பந்தை வீசி அதற்கேற்றார் போல பீல்டரை வைக்கிறார்கள் பவுலர்கள். உள்ளுணர்வில் உந்தப்பட்டு அவர் புல் ஷாட் ஆடி அவுட் ஆகிறார்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: தனது முதல் சர்வதேச ODI-யில் மொத்த சரக்கையும் இறக்கிய பதிரனா. ஆனால் எடுத்தது எத்தனை விக்கெட் தெரியுமா?
மேலும் அவர் “நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் பார்த்தால், அவரது புல் ஷாட் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது பேக்லிப்ட் மேலிருந்து வரவில்லை, அதனால் அவர் பந்தை கீழே அடிக்க முடியும். அவர் மிகவும் லோ பேக் லிப்ட் கொண்டவர். அதனால் ஒருநாள் போட்டிகளிலும் டி 20 களிலும் அவரால் சிறப்பாக புல் ஷாட் ஆட முடிகிறது” எனக் கூறியுள்ளார்.