இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்களில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் துலீப் டிராபி தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதினால் இந்த தொடரும் இந்திய வீரர்கள் மத்தியில் மிகவும் ஒரு பிரபலமாக தொடராக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த துலீப் டிராபி தொடரின் இறுதிகட்ட போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் சென்ட்ரல் ஸோன் மற்றும் வெஸ்ட் ஜோன் ஆகிய அணிகள் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் ஸோன் அணியின் கேப்டன் பிரியங்க் பன்சால் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
இந்த வெஸ்ட் ஸோன் அணியில் தான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று காத்திருக்கும் பிரபல வீரர்களானே ப்ரித்வி ஷா, சூரியகுமார் யாதவ், சர்பராஸ் கான், புஜாரா ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த துலீப் டிராபி அரையிறுதியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒரே போட்டியில் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சொதப்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி இந்த போட்டியில் சர்பராஸ் கான் 12 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமலும், ப்ரித்வி ஷா 26 ரன்களுடன், புஜாரா 28 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் நடையை கட்டினர். இப்படி இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியது தற்போது அனைவரது மத்தியிலும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயராக இருந்த சர்பராஸ் கான் இந்த போட்டியில் 12 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் சிவம் மாவி பந்துவீச்சில் ஆட்டமிழந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின்னர் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பலரும் பேசி வந்த வேளையில் தேர்வு குழுவினர் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ்-க்கு அனுப்பி இருந்தனர்.
அதே வேளையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்ட்ட பிரியன்க் பன்சால், சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோருக்கு வாய்ப்பினை வழங்காதது பலரது மத்தியிலும் பெரிய அளவில் விவாதத்தை எழுப்பி இருந்தாலும் தற்போது அப்படி குறிப்பிடப்பட்ட வீரர்களே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது பிசிசியின் தேர்வை சரியாக காட்டுவதாகவே தெரிகிறது.