டி 20 உலக கோப்பைத் தொடரில் இன்னும் சில லீக் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில் ஆறு அணிகள் இதுவரை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறி உள்ள நிலையில் மற்ற இரண்டு இடங்களுக்கு பங்களாதேஷ், நேபால், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய ஐந்து அணிகளுக்கு இடையே போட்டி இருப்பதாக தெரிகிறது.
இதனால் அடுத்த சில போட்டிகளின் முடிவில் எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள் என்பதும் தெரிந்து விடும். அப்படி ஒரு சூழலில் தான் சில இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரிய அணிகள் இந்த முறை லீக் சுற்றோடு வெளியேறி இருந்ததும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பங்களாதேஷ் அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மீதம் இருக்கும் நிலையில் நேபாளுக்கு எதிராக அந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அவர்களும் தங்கள் குரூப்பில் இருந்து தென்னாபிரிக்கா அணியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். முன்னதாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்திருந்த நிலையில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி இருந்தது.
இதில் நெதர்லாந்துக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் அணி தடுமாற சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி 46 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்தார். இதனால் 150 ரன்களை கடக்க, 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தனர். இந்த போட்டிக்கு முன்பாக ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நீங்கள் ஒன்றும் கில்கிறிஸ்டோ, ஹைடனோ கிடையாது என்றும் பங்களாதேஷ் வீரராக உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டும் ஆடுங்கள் என்றும், உங்களுக்கு பந்துவீச்சும், பேட்டிங்கும் வரவில்லை என்றால் ஓய்வை அறிவித்து விடுங்கள் என்றும் சரமாரியாக சாடி இருந்தார்.
அப்படி ஒரு சூழலில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றியை தேடி கொடுத்த ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். இதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் சேவாக் விமர்சனம் பற்றி கேள்வி எழுப்ப, இதற்கு பதில் சொன்ன அவர், ‘சேவாக்கா அது யார்?’ என கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு வீரர் எந்த கேள்விக்கும் எப்போதும் பதில் சொல்ல தேவை இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகவோ, பவுலோராகவோ அணிக்கு என்ன வேண்டுமோ நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது தான் வீரரின் வேலை. இதனால் அனைவருக்குமே பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
ஒரு வீரர் அணிக்காக நல்ல பங்களிப்பை அளிக்காமல் இருக்கும்போது நிச்சயம் அவரை சுற்றி பல விவாதங்களும் உருவாகும். அதனை நான் தவறான விஷயமாக பார்க்கவில்லை” என ஷகிப் அல் ஹசன் கூறினார்.