மும்பை இந்தியன்ஸ் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 200 பிளஸ் டோட்டலைத் துரத்தியது. நேற்று PCA ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் இஷான் கிஷன் (75), சூர்யகுமார் யாதவ் (66) ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 116 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டோன்-ஜிதேஷ் ஷர்மா ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை இந்த இலக்குக்கு அழைத்துச் சென்றது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் சுதாரித்து அதிரடியாக விளையாடி இலக்கை 19 ஆவது ஓவரிலேயே எட்டியது. இந்த போட்டியில் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
போட்டி முடிந்ததும் பேசிய சூர்யகுமார் யாதவ் “நாங்கள் வெற்றி பெற்றதில் உண்மையிலேயே மகிழ்ச்சி, ஆனால் களத்தில் கடைசிவரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும் என்று உணர்கிறேன். கடந்த போட்டியிலும் இதே தவறை நான் செய்தேன். அது ஒரு குறையாக என்னிடம் உள்ளது. நான் உள்ளே சென்றபோது, நேர்மறை எண்ணத்துடன் பேட்டிங் செய்வதும், நன்றாக பேட்டிங் செய்யும் இஷானுக்கு ஆதரவு கொடுப்பதும் முக்கியம்.
இந்த சூழ்நிலைகளுக்கு நான் எப்போதும் தயாராகி வருகிறேன், எல்லா திட்டங்களும் மிகத் தெளிவாக இருந்தன. நான் பேட்டிங் செய்ய வெளியேறும்போது நானாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் இஷானை ஆதரிக்க வேண்டியிருந்தது, அதே போல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட் செய்ய வேண்டியிருந்தது. உண்மையில் என்னிடம் பவர் கேம் இல்லை, பந்தை டைம் செய்து விளையாடுவேன். பீல்டர்கள் இல்லாத திசையில் பந்துகளை அடிப்பவன். ” எனக் கூறியுள்ளார்.