பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 38 ஓவர்கள் ஸ்பின்னர்களை வைத்து வீசியதால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் சேர்த்தார்.
இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்க்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால், ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியால் உற்சாகமடைந்த ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதேபோல் நல்ல கிரிக்கெட்டை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக பாராட்டினர். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேசும் போது, இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் சிறந்த சேஸிங்கை செய்திருக்கிறோம். இதன் மூலம் அடுத்த போட்டிகச்ளில் விளையாட ஆர்வமாக உள்ளோம். இதுபோன்ற சேஸிங்கை மீண்டும் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தரமான கிரிக்கெட்டை விளையாடி வருவதால், ஆசிய கோப்பையின் போதே எங்களுக்குள் அதிக நம்பிக்கை இருந்தது.
ஏற்கனவே கூறியதை போல் உலகக்கோப்பை தொடரை மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக எங்கள் மக்களுக்காக மாற்ற வேண்டும் என்று கூறினோம். முதலில் இங்கிலாந்தையும், தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறோம். இந்த உலகக்கோப்பையில் எங்கள் நாட்டுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணத்துடன் உள்ளோம். பவுலிங்கில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று சொல்ல வேண்டும்.
நூர் அஹ்மத் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தோம். அவர் தனது திறமையை நிரூபித்துவிட்டார். குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேஸிங்கை சிறப்பாக தொடங்கியது எங்களின் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நானும், ரஹ்மத் ஷா அமைத்த பார்ட்னர்ஷிப்பும் சிறந்ததாக அமைந்தது என்று கூறியுள்ளார்.