இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடர்ந்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. குறைந்தது 280 ரன்கள் விளாசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கடைசி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் விளாசினர். இதன் காரணமாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதேபோல் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் சில நிமிடங்கள் நட்புடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலி கையெழுத்திட்ட அவரின் 2 ஜெர்சிகளை பரிசாக பெற்றார்.
இந்த வீடியோ நேரலையில் ஒளிபரப்பாகியது. பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த போட்டிக்காக விவாதம் மற்றும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஏராளமான வீரர்கள் கலங்கி பதில் சொல்ல முடியாமல் திணறினர். ஆனால் பாபர் அசாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விராட் கோலியிடம் ஜெர்சியை பெற்றார்.
இதனை பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரம் பேசும் போது, விராட் கோலியிடம் இருந்து இரு ஜெர்சியை வாங்கும் பாபர் அசாமின் வீடியோவை பார்த்தேன். இந்திய அணிக்கு எதிராக விளையாடி பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை அடைந்திருக்கும் நிலையில், பாபர் அசாம் இப்படி செய்ய கூடாது.
ஜெர்சியை பெறுவதற்கான நாள் இதுவல்ல. பாபர் அசாமின் மாமாவினுடைய பையன் கேட்டதற்காக அவர் ஜெர்சியை பெறவேண்டும் என்று எண்ணி இருந்தால் அதை அவர் ஓய்வறையில் வைத்து பெற்றிருக்கலாம். அதை விடுத்து இப்படி செய்தது சரியல்ல என்று கூறியுள்ளார்.