அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “விடாமுயற்சி”. அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளியேறினார்.
அவர் வெளியேறியதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டது. அதாவது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விக்னேஷ் சிவன் முழு ஸ்கிரிப்ட்டையும் முடிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன் கூறிய கதையில் அஜித்குமாருக்கு திருப்தி இல்லை எனவும் கூறப்பட்டது. இது குறித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது அவர் இந்த கூற்றுகளை மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்று டைட்டிலும் வைக்கப்பட்டது. “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்”, “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து “V” சென்டிமென்ட் காரணமாக அஜித் மீண்டும் “விடாமுயற்சி” என்று டைட்டில் வைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
“விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அனிருத் தற்போது டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்தின் “ஜெயிலர்”, “தலைவர் 170” ஆகிய திரைப்படங்களுக்கும், விஜய்யின் “லியோ” திரைப்படத்திற்கும் கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்திற்கும் அனிருத்தான் இசை.
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அனிருத் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அனிருத் சமீப காலமாக 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுவருகிறாராம். ஆனால் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார். இது குறித்து ஒரு காரணமும் கூறப்படுகிறது.
அதாவது அனிருத், “விடாமுயற்சி” திரைப்படத்தில் சென்ற ஆண்டு மார்ச் மாதமே ஒப்பந்தமாகிவிட்டாராம். அப்போது அவரது சம்பளம் 5 கோடியாக இருந்திருக்கிறது. அதன் பின்புதான் அவர் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தியிருக்கிறார். ஆதலால்தான் “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக முதலில் ஒப்பந்தமான அதே 5 கோடி சம்பளத்திலேயே தற்போதும் பணியாற்றவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.