தமிழில் “தேவி 2”, “வீரமே வாகை சூடும்” ஆகிய திரைப்பங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கில் “கல்ஃப்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த டிம்பிள் ஹயாதி, தனுஷ் ஹிந்தியில் நடித்த “அட்ரங்கி ரே” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
டிம்பிள் ஹயாதி ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தனது ஆண் நண்பருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர் அதே அபார்ட்மென்டில் வசித்து வரும் ஐபிஎஸ் அதிகாரியான ராகுல் ஹெக்டே என்பவருடன் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதாவது பார்க்கிங் பகுதியில் ஐபிஎஸ் அதிகாரி அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் எப்போதெல்லாம் வாகனத்தை நிறுத்துகிறாரோ அப்போதெல்லாம் டிம்பிள் ஹயாதி அவரது வாகனத்தை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. இது அடிக்கடி நடப்பதாகவும், ஒரு முறை டிம்பிள் ஹயாதி தனது காரை எடுக்கும்போது அந்த ஐபிஎஸ் அதிகாரியின் காரை சேதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரியின் கார் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது டிம்பிள் ஹயாதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் டிரைவரை தகாத வார்த்தைகள் சொல்லி டிம்பிள் ஹயாதி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்புகாரை தொடர்ந்து டிம்பிள் ஹயாதி போலீஸாரிடம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிம்பிள் ஹயாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து ஒரு டிவிட்டை பகிர்ந்துள்ளார். அதில் “அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் தவறுகளை மறைக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.