சாந்தனு பாக்யராஜ் “சக்கரக்கட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டாக்சி டாக்சி” பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எனினும் இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. “சக்கரக்கட்டி” திரைப்படத்தை தொடர்ந்து “சித்து பிளஸ்2”, “கண்டேன்”, “ஆயிரம் விளக்கு” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் சாந்தனு. ஆனால் அவரது கெரியரின் வளர்ச்சிக்கு எந்த திரைப்படமும் கைக்கொடுக்கவில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு “பாவக் கதைகள்” திரைப்படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாந்தனு. அதனை தொடர்ந்து விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் பார்கவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் சாந்தனு. அத்திரைப்படத்தில் அவரை வைத்து பல காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அத்திரைப்படத்தில் சில காட்சிகளே இடம்பெற்றிருந்தது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து சாந்தனு, “கசடதபற”, “முருங்கைக்காய் சிப்ஸ்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது சாந்தனு நடித்துள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. இத்திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ராமநாதபுர மாவட்டத்தில் சீமைகருவேல மரங்களால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது என்ற கருத்தியலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கலந்துகொண்டார். அப்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு கேள்வி கேட்டார். பயில்வான் ரங்கநாதனை பார்த்த சாந்தனு, “என்னண்ணே நல்லா இருக்கீங்களா?” என நக்கலாக கேட்டார். அதன் பின் பயில்வான் ரங்கநாதன், “ஏன் பாக்யராஜ் வரவில்லை?” என்று கேட்க, அதற்கு சாந்தனு, “அவர் ஊரில் இல்லை. அதுவும் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்கவும் இல்லை. ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்? இதை வைத்து எதுவும் சர்ச்சையான டைட்டிலை யூட்யூப்பில் போடுவதற்கா?” என்றும் கேட்டார்.
மேலும் பேசிய சாந்தனு, “நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். இப்போ நீங்க என்ன பேசுனாலும் அது படத்துக்கு பப்ளிசிட்டிதான். ஆதலால் நான் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன்” எனவும் சிரித்துக்கொண்டே கூறினார். இதனால் அங்கே சற்று சிரிப்பலை எழுந்தது.
பயில்வான் ரங்கநாதன் யூட்யூப்பில் பேசும் பல விஷயங்கள் சர்ச்சையாவது உண்டு. அதே போல் பல சினிமா விழாக்களில் பல நடிகர், நடிகைகளிடம் அவர் கேட்கும் கேள்விகளும் சர்ச்சையை உண்டு செய்வதும் குறிப்பிடத்தக்கது.
“இராவண கோட்டம்” திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். கண்ணன் ரவி இத்திரைப்படத்தை தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இதற்கு முன் “மதயானைக் கூட்டம்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.