“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் அட்லீயுடன் கைக்கோர்க்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால் அதன் பின் தெலுங்கு இயக்குனர் கோபிச்சந்த் மல்லினேனி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது.
இதனை தொடர்ந்து சமீப நாட்களாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில் நேற்று இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
“தளபதி 68” திரைப்படத்தில் விஜய்-வெங்கட் பிரபு இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கு முன் விஜய் நடித்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன் பின் விஜய்யின் எந்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய்-யுவன் கூட்டணி அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்த ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத், மேத்யூ, பிரியா ஆனந்த் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் ஏற்கனவே “லியோ” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கும் நிலையில் தற்போது விஜய் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.