பல வருடங்களாக விஜய் அரசியலுக்குள் நுழைய உள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதன் தொடக்கமாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். அதனை தொடர்ந்து தனது திரைப்படங்களின் மூலம் அரசியல் ரீதியான கருத்துக்களை துணிச்சலாக கூறி வந்தார். அதன் விளைவாக பல எதிர்ப்புகளும் கிளம்பியது. எனினும் அரசியலுக்கான காய் நகர்த்தலை விஜய் மிக தீவிரமாக செய்து வருகிறார் என பலரும் கூறிவருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை தனது வீட்டிற்கே வரவழைத்து தமிழ்நாட்டு அரசியல் குறித்து கலந்துரையாடியதாக ஒரு தகவல் வெளிவந்தது. மேலும் மாவட்ட ரீதியிலான மக்கள் இயக்க நிர்வாகிகளை கடந்த சில மாதங்களில் இருமுறை அழைத்து பேசியுள்ளார் விஜய். இதன் மூலம் விஜய் மிக சீக்கிரமாகவே அரசியலுக்குள் நுழையப்போவதாக பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்டுகள் வெளிவந்த நிலையில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து மாநிலத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை நேற்று நேரில் சந்தித்த திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த மாணவியை பாராட்டி தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஜய் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் பரிசுகளையும் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலையும், அந்த மாணவர்களின் ஆதார் நகல்கள், மதிப்பெண் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், வங்கி கணக்கு பாஸ்புக் நகல்கள், மொபைல் எண் ஆகியவற்றை சேகரித்து வருகிற 20 ஆம் தேதிக்குள் தனது அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
அதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தபிறகு இதே போல் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பட்டியலையும் விவரங்களையும் சேகரிக்குமாறு கூறியுள்ளாராம். இவ்வாறு கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையும் பரிசுகளையும் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். மொத்தம் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய்யின் கல்வித்தொகையும் பரிசுகளும் சென்று சேரும் வகையில் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சி அடுத்த மாதம் திருச்சி அல்லது சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் விஜய் நேரிலேயே கலந்துகொண்டு மாணவ, மானவியர்களுக்கு பரிசுகளை வழங்குவார் எனவும் கூறுகின்றனர்.