Homeஇந்தியாமேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு ஜனாதிபதியும், பிரதமர் மோடியும் இரங்கல்!

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு ஜனாதிபதியும், பிரதமர் மோடியும் இரங்கல்!

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில்மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரிலிருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில் 3-ல் 5 பெட்டிகள்வரை சேதமடைந்துள்ளது. விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்திய நிலையில் தற்போது இந்த விபத்தில் ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் வருத்தம்: இந்த விபத்துகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்துகுறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில்மீது சரக்கு ரயில் மோதியதாகத் தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்துப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: விபத்துகுறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரெயில் விபத்தில் உயிர்களை இழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தில் நடந்த ரெயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்