Homeதமிழ்நாடுதமிழகத்தை தொடரும் ஆணவக் கொலை! கே பாலகிருஷ்ணன் எதிர்ப்பு

தமிழகத்தை தொடரும் ஆணவக் கொலை! கே பாலகிருஷ்ணன் எதிர்ப்பு

அருப்புக்கோட்டை அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து – மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (21). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அழகேந்திரன், மதுரை கள்ளிக்குடியில் உள்ள தனது உறவினரான அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் மாமன் மகன் பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றதாக அழகேந்திரனின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மகன் வீடு திரும்பவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அழகேந்திரனின் பெற்றோர் உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே செவ்வாய்கிழமை, கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் அழகேந்திரன் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச் சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக கொண்டு வரப்பட்டுள்ளது. தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து, அழகேந்திரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது இளைஞரின் ஆணவ படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், ஆணவ படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வழக்கின் திசையை மாற்றும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாகவும் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தொடரும் சாதி ஆணவப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பாராமுகமாக இருந்து கடமை தவறிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்