பரமக்குடியை சேர்ந்தவர் ரஜினி. 36 வயதான இவர் பரமக்குடி நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று தனது நண்பர் பாண்டி என்பவருடன் மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆடைகள் வாங்கிவிட்டு பைக்கில் பரமக்குடி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச் சாலையில் கமுதக்குடி என்ற இடத்தில் வந்தபோது ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக்கில் பின்புறம் அமர்ந்து வந்த பாண்டி பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பைக்கில் சென்ற இளைஞர் செல்போன் வெடித்து உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பரமக்குடி நகர போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ரஜினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.