Homeதமிழ்நாடுஇந்த மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல போறீங்களா? அதற்கான சரியான நேரம்!

இந்த மாத பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல போறீங்களா? அதற்கான சரியான நேரம்!

நினைத்தாலே முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும் சைவ குரவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் சிவனே மலையாக அருள் பாலிக்கும் தளமாகவும் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்த தலம் போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குவது திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோவில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.உலகில் இருக்கும் பழமையான மலைகளில் ஒன்றாக திருவண்ணாமலை ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் அம்பிகையை தரிசிப்பது எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே அளவு சிறப்பானது அண்ணாமலையாரை வலம் வந்து வணங்குவது.

திருவண்ணாமலையை நினைத்தாலே பாவம் தீரும் எனவும் திருவண்ணாமலையை வலம் வந்த உடன் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் வெளிமாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பவுர்ணமி வருகிற 21-ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சற்று முன்