Homeதமிழ்நாடுகள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு இனி கட்டாயம் ஆயுள் தண்டனை தான்.

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு இனி கட்டாயம் ஆயுள் தண்டனை தான்.

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்தார்.

தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதிய இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளசாரய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்றும் அரசு கருதுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் சிறை தண்டனின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்வற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களில் மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சற்று முன்