Homeதமிழ்நாடுகள்ளச்சாராயம் குடித்தவர்களில் மீண்டும் ஒருவர் பலி! தனக்கு சரியாகிவிட்டது என்று மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த...

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மீண்டும் ஒருவர் பலி! தனக்கு சரியாகிவிட்டது என்று மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த பிறகு, ஒரே நாளில் வீட்டில் நடந்த சோகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவர்களும் அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் எனப்படும் ரசாயனம் அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்து பலரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யாண் சுந்தரம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

இதில் விஷ சாராயம் அருந்தியதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி மருத்துவமனையில் இருந்து தப்பிய நிலையில், இன்று வீட்டில் மரணமடைந்தார். தனக்கு சரியாகிவிட்டது என நினைத்து மருத்துவர்களுக்கே தெரியாமல் வீட்டிற்கு தப்பி வந்த சுப்பிரமணி, நேற்று முழுவதும் வீட்டில் நன்றாக இருந்துள்ளார். ஆனால், இன்று அதிகாலையில் அவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சற்று முன்