- Advertisement -
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு! அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற வேண்டுமா? அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன்வசதி, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி, மாதம் மாதம் உதவி தொகை, சக்கர நாற்காலி, இலவச பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதுதவிர வீடு வாங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடும் கட்டித்தருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையில் ரூ.1.5 லட்சம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளவிமேட்டில் 12 வீடுகளும், டோபிகானாவில் 3 வீடுகளும், பத்தலப்பள்ளியில் 290 வீடுகளும், கரிகரியில் 230 வீடுகளும் என மொத்தம் 535 வீடுகள் வழங்க தயாராக உள்ளது. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்” இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts