விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு மின் கட்டண உயர்வை திமுக அரசு பரிசாக வழங்கியுள்ளது என்று விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார்திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.