Homeதமிழ்நாடுஇந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது. புதிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு!

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது. புதிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு!

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், மழை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.கவர்னர் உரை மீதான விவாதம் 15-ம் தேதிவரை நடந்தது. அன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையை அளித்தார். அதைத் தொடர்ந்து, 19, 20-ம் தேதிகளில் தமிழக அரசின் பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் 22-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, துறைவாரியாக மானியகோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், பாராளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி, மீண்டும் கூடும் தேதி அறிவிக்காமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று (ஜூன் 20) மீண்டும் கூடுகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், காலை, மாலை என இரு வேளையும் பேரவை கூட்டம் நடக்கிறது. தமிழகத்தின் 39 பாராளுமன்ற மக்களவை தொகுதிகளையும் வெற்றி பெற்ற உத்வேகத்தில் ஆளும் தி.மு.க. உள்ளது. இதனால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விரிவாக்கம், புதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று, கூட்டத்தில், மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து நாளை (21ம் தேதி – வெள்ளி) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடும்.

இதை அடுத்து நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவது தொடர்பாக விதிகள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை கூடியதும் விதிகள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். அதன் பிறகு மானியக்கோரிக்கை மசோதா மீதான விவாதம் 8 நாட்கள் மட்டும் நடத்தப்படுகிறது.

மானியக்கோரிக்கை மசோதா மீதான விவாதத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் பரவி வரும்சூழலில், அதுபற்றிய முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிகிறது. அதேநேரம், மின்கட்டணம், போதைப் பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பு வலியுறுத்தும் என தெரிகிறது.

எந்தெந்த துறைகள் மீது விவாதம்:

21ம் தேதி – – காலை – நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் ஆகிய துறை.
21ம் தேதி – – மாலை – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை,
மதுவிலக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை.
22ம் தேதி – காலை – உள்ளாட்சி துறை, மாலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை,
கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.
23ம் தேதி – ஞாயிறு – அரசு விடுமுறை.
24ம் தேதி – காலை – உயர் கல்வி துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை,
24ம் தேதி – மாலை – நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும்
விளம்பரம், தமிழ் வளர்ச்சி துறை
25ம் தேதி – காலை – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,
பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை.
25ம் தேதி – மாலை – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறி, போக்குவரத்து துறை,
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
26ம் தேதி – காலை – திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை,
26ம் தேதி – மாலை – சுற்றுலா துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும்
பத்திரப்பதிவு துறை, இந்து சமய அறநிலைய துறை,
27ம் தேதி – காலை – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,
சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல்.
27ம் தேதி – மாலை – கூட்டுறவு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
28ம் தேதி – காலை – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,
சுகாதார துறை, தகவல் தொழில்நுட்பவியல், தொழில் துறை.
28ம் தேதி – மாலை காவல், தீயணைப்பு.
29ம் தேதி – காவல், தீயணைப்பு துறை மீதான விவாதத்துக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பார்.
29ம் தேதி – அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.

சற்று முன்