தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நிதியுதவிகளும் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
இந்தப் பொருட்களில் பாமாயில் மட்டும் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை குடும்ப அட்டைதாரர்கள் கொண்டு வரும் பைகளில் மின்தராசு மூலம் எடையிடப்பட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறாக வழங்கப்படும் போது எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் கட்டமாக, சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கடையில், தலா ஒரு கிலோ எடையில் துவரம் பருப்பு, சர்க்கரை அரை கிலோ முதல் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் கவர்களிலும், அரிசி 10 கிலோ முதல் பிளாஸ்டிக் சாக்குப்பைகளிலும் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வந்து கேட்கும் போது எடைக்கேற்ற பை எடுத்து தரப்படுகிறது.
முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு கடை தேர்வு செய்யப்பட்டு அந்தக் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் மற்ற கடைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கூட்டுறவு, உணவுத் துறைகள் முடிவெடுத்துள்ளன.
மேலும் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: “தமிழக அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை மாதம் பெறலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, ஜூலை மாதம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜுலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக கடைகளுக்கு அனுப்பப்படாததால், குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை. ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் இந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.