Homeதமிழ்நாடுரேஷன் கடைகளில் பாமாயில் விற்க வேண்டாம். ஜி.கே வாசன் வேண்டுதல்.

ரேஷன் கடைகளில் பாமாயில் விற்க வேண்டாம். ஜி.கே வாசன் வேண்டுதல்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் ரேஷன் அட்டை மூலம் பொது விநியோக திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். பொதுமக்களுக்கு பயனுள்ள பொருள்களை வழங்குவது அரசின் கடமை என்று தெரிவித்தார்.

பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படுவதாகவும், குறிப்பாக பாமாயில் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்த அவர், “பாமாயில் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால் நம் நாட்டைச் சேர்ந்த சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “அப்படி செய்வதன் மூலமாக உள் நாட்டு வருமானமும் உயரும். தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தும் போது பல்வேறு பயன்களும் உள்ளன. இதனால் பல்வேறு உடல் நோய்கள் தடுக்கப்படுகிறது, கட்டுக்கள் கொண்டு வரப்படுகிறது.

ஆகவே ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக உடல் ஆரோக்யத்தை தரும் உள் நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்களை வழங்க வேண்டும்” என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஜி.கே.வாசனின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றுமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

சற்று முன்