Homeதமிழ்நாடுரயில்வே சம்பந்தப்பட்ட பணிகளை பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை அதற்காக செலவு செய்யாமல் விட்டதே விபத்துக்கு காரணம்.

ரயில்வே சம்பந்தப்பட்ட பணிகளை பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை அதற்காக செலவு செய்யாமல் விட்டதே விபத்துக்கு காரணம்.

மேற்கு வங்கத்தில் இன்று காலை கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் சரக்கு இரயிலின் லோக்கோ பைலட் உள்ளிட்ட 15 பயணிகள் உயிரிழந்திருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு வங்கத்தில் இன்று காலை கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் சரக்கு இரயிலின் லோக்கோ பைலட் உள்ளிட்ட 15 பயணிகள் உயிரிழந்திருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் இரயில்வே விபத்துகள் நரேந்திர மோடி அரசின் தவறான நிர்வாகத்தையும், அலட்சியப் போக்கையும் வெளிப்படுத்துகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தொடர் இரயில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஆகும்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய இரயில்வே பாதுகாப்பு நிதியை அதிகாரிகள் தங்கள் சொந்த வசதிகளை பெருக்கிக்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த வரி செலுத்துவோரின் பணம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்று 2021 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மடைமாற்றம் செய்யப்பட்டு இரயில்வே அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட வீடுகள், தங்கும் விடுதிகளிலும் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளன. இந்த நிதியில் இருந்து விலை உயர்ந்த வாகனங்களையும் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளனர். இந்த நிதியானது அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு தொடர்ச்சியாக செலவிடப்பட்டதற்கு சி.ஏ.ஜி. புள்ளி விபரங்கள் சாட்சியாக உள்ளன.

கடந்த 2017 – 18 இல் ரூ.463 கோடி, 2018 -19 இல் ரூ.837 கோடி, 2019 – 20 ரூ.1004 கோடி செலவிடப்பட்டதாக சி.ஏ.ஜி. கூறுகிறது. சி.ஏ.ஜி தனது அறிக்கையில் பயணிகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டிய நிதியில் இருந்து ஆடம்பர பொருட்கள் வாங்கப்படுவதற்கு தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருக்கிறது. இரயில்வேத் துறை அலட்சியப்போக்குடன் செயல்படுவதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. பயணிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட தொகையை அதற்கு செலவிடாததால் தொடர்ந்து இரயில் விபத்துகள் ஏற்படுவதற்கு நரேந்திர மோடி அரசு தான் பொறுப்பாகும். மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. இத்தகைய இழப்புகளை தடுக்கும் வகையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதின் மூலமே இத்தகைய இரயில் விபத்துகளை தடுக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பு குறித்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு, பயணிகளின் உயிரிழப்புக்கு காரணமான நரேந்திர மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்